நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கனமழை பாதிப்பு தொடர்பாகவும், எடுக்கப்ப்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நீடிக்கிறது. இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு, காட்டாற்று வெள்ளம் என தாமிரபரணி ஆற்றில் 80,000- கனஅடிக்கும் மேல் தண்ணீர் செல்கிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீரில் மூழ்கியது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெனரேட்டர் மூலம் இயங்கும் கட்டுபாட்டு அறையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யபட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், எடுக்கப்ப்ட வேண்டிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாகவும் நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருறது.