10 அடி தூரம் மட்டுமே தேர் சென்ற நிலையில் மீண்டும் வடம் அறுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், 7 முறை வடம் அறுந்ததால் பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒரு வடத்திற்கு பதிலாக இரும்பு சங்கிலியை கோர்த்து தேரை இழுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 4 வடங்கள் கொண்ட தேரில் 2 வடங்களும், ஒரு இரும்பு சங்கிலியும் கோர்க்கப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. இரும்பு சங்கிலி நீளமாக இல்லாததால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கைகளைக் கோர்த்து தேரை இழுத்தனர். இதனால் நெல்லையப்பர் தேர் மிகவும் மெதுவாக நகர்ந்தது. 11.30 மணி அளவில் சந்திப்பிள்ளையார் கோயில் திருப்பத்திற்கு முன்பாக வந்தபோது திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட வடம் வந்து சேர்ந்தது. இதையடுத்து மற்றொரு வடம் பொருத்தப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் வரை தேர் அந்த இடத்திலேயே நின்றது. பின்னர் 3 வடங்கள் பொருத்தப்பட்டதால் ஓரளவு சுலபமாக தேர் நகர்ந்தது. பிற்பகல் 1 மணியளவில் தேர் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டதும், பக்தர்கள் மதிய உணவிற்காக புறப்பட்டுச் சென்றனர்.