சென்னை: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அறிக்கை: கடந்த 17 மற்றும் 18ம் தேதி அதிகனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதிப்பின் அடிப்படையில் நிவாரணத் தொகையாக 6,63,760 குடும்பங்களுக்கு குடும்ப அட்டையின் அடிப்படையில் ரூ,6,000 நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசி வழங்கவும், 14,31,164 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.1,000 வழங்க அரசு ஆணைகள் பெறப்பட்டதன் அடிப்படையில், மேற்கண்ட 4 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சி தலைவர்கள், காவல் ஆணையர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று முன்னேற்பாடுகள் கூட்டம் நடத்தி இப்பணியினை சிறப்புடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.
இன்று முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் அட்டைதாரர்கள் குறித்த நாட்களில் குறித்த நேரத்தில் சென்று நிவாரண உதவிகளை பெற்று செல்லலாம். குறைகள் இருந்தால் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 93424 71314, 97865 66111 எண்களிலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 94864 54714, 1077 எண்களிலும், தென்காசி மாவட்டத்திற்கு 04633-290548, எண்ணிலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 04652-231077 எண்ணிலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அலுவலகத்தில் 044-28592828 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். பொதுமக்கள் இப்பணிக்கு ஒத்துழைப்பு நல்கி நிவாரணம் பெறலாம்.