நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே நிரந்தர ரவுண்டானா: சிக்னல் இன்றி கடந்து செல்லலாம்


தியாகராஜநகர்: நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே நிரந்தரமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியை சிக்னல் இன்றி நிதானமாக கடந்து செல்லலாம். நெல்லை மாநகரில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை குறைப்பதற்காக சாலை விரிவாக்க பணி, ஒருவழிப்பாதை, சிக்னல் இன்றி கடந்து செல்வது போன்ற மாற்றங்களை மாவட்ட நிர்வாகம் ஆலோசனை உடன், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை இணைந்து செயல்படுத்தி வருகிறது. நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே இரண்டு அடுக்கு மேம்பாலம், சந்திப்பு பஸ் நிலைய சாலை, திருவனந்தபுரம் சாலை சந்திக்கும் பகுதியாக உள்ளது. இதனால் இங்கு போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக இருந்து வந்தது. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள அண்ணா சிலையை சுற்றி பஸ்கள் மேம்பாலத்தில் ஏறிச்சென்றன.

அந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வருவதற்காக பரிச்சார்ந்த வாகன இயக்கம் முறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த சுமார் 3 மாதங்களாக அண்ணா சிலையை சுற்றி தற்காலிகமாக தடுப்புகள் வைத்து சிக்னல் இன்றி வாகனங்கள் மெதுவாக கடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதை போலீசார், நெடுஞ்சாலை துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த முயற்சி ஓரளவு கை கொடுத்தது. இதையடுத்து அங்கு நிரந்தரமாக அண்ணா சிலையை சுற்றி ரவுண்டானா அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் இந்தப் பகுதியை வாகனங்கள் சிக்னல் இன்றி தங்களது திசை நோக்கி எளிதாக கடந்து செல்ல முடியும். இங்கு போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் கூடுதல் வாகன போக்குவரத்து இருப்பதால் போக்குவரத்து போலீசார் கண்காணித்து வாகனங்கள் கடந்து செல்ல உதவுவார்கள்.

இந்தப் பகுதி ரவுண்டானா போல் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை பகுதியிலும் புதிய பஸ் நிலையம் அருகே நாகர்கோவில் ரோடு, தெற்கு பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியிலும் ரவுண்டானா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு