அதைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: மழை வெள்ளத்தால் நாகர்கோவில்-5, விருதுநகர்-13, தென்காசி-13, தூத்துக்குடி-113 மற்றும் திருநெல்வேலியில்-44 சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டு விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் திருச்செந்தூரையும், பாளையங்கோட்டையும் இணைக்கும் தரைப்பாலம் உடைந்ததால், தற்காலிகமாக 40 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சாலை போட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் தமிழ்நாட்டில் உள்ள தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி, தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 1,127 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்பட்டு வருகிறது. அதில் இந்த தரைப்பாலமும் அடங்கும். இதற்கு ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் செக்டேம் கட்டுவதில் இருவேறு கருத்துகள் உள்ளது. ஆனால், தாமிரபரணி ஆற்றின் கரையை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. 4 மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை நிரந்தரமாக சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து, மூன்று நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரிடம் கூறப்பட்டுள்ளது. மாஞ்சோலை மலை கிராமத்திற்கு, வனத்துறையிடம் ஒப்புதல் பெற்றவுடன் சாலை அமைக்கப்படும் என்றார்.