Monday, July 8, 2024
Home » நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிப்பறைகள் சீரமைப்பு-மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிப்பறைகள் சீரமைப்பு-மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

by Lakshmipathi

நெல்லை : பாளை வேய்ந்தான்குளம் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து காணப்பட்ட இலவச கழிப்பறைகள் சீரமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். பாளை வேய்ந்தான்குளம் பகுதியில் செயல்படும் பாரதரத்னா எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளது. இங்கிருந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு மாநகர பஸ்கள் தினசரி இயக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், நெல்லை அரசு மருத்துவமனை, பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் வெளியூர்களுக்கு பயணம் செய்வோர் என பல்வேறு காரணங்களுக்காக தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பஸ்நிலையத்தில் ெபாதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு நடைமேடையிலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே நவீன கட்டண கழிப்பறைகள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமேயுள்ள ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே இலவச கழிப்பறைகளும் முறையான பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கு வரும் பயணிகள் உள்ளிட்டோர் இலவச கழிப்பறைகளுக்கு செல்வதை தவிர்த்து அங்குள்ள நவீன கட்டண கழிப்பறைகளுக்கு செல்லும் நிலை உருவானது.

நவீன கட்டண கழிப்பறைகளில் சிறுநீர், மலம் கழிக்கும் வசதி, குளியலறை வசதி உள்ளபோதும் எந்தவொரு கட்டண கழிப்பறைக்கு முன்பாகவும் சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க அரசு நிர்ணயித்த எந்தவொரு கட்டண அறிவிப்பு பதாகையும் வைக்கப்படவில்லை. இதை வாய்ப்பாக பயன்படுத்தி சிறுநீர் கழிக்க ரூ.5, மலம் கழிக்க ரூ.10 என கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனவே, இலவச கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிப்பதோடு, இங்குள்ள நவீன கட்டண கழிப்பறைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் விதமாக அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரங்கள் குறித்த விளம்பர பதாகைகள் வைக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர். இதுகுறித்த செய்தி தினகரனில் நேற்று படத்துடன் வெளியானது.

இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பிறப்பித்த உத்தரவின் பேரில், நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறைகளை சீரமைத்து, சுத்தப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். இதை வரவேற்றுள்ள பயணிகள், மாநகராட்சி அதிகாரிகளின் துரித நடவடிக்கைக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தனர். இதேபோல் இங்குள்ள கட்டண கழிப்பறைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

You may also like

Leave a Comment

11 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi