காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுத்திட மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பகுதியில் உள்ள மளிகை கடையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, யுவராஜ் (30) என்பவரின் கடையில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரத்தை அடுத்த சதாவரம் பகுதியில் யுவராஜின் தந்தை ரகுபதி (56) குட்கா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதனையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைதான யுவராஜை சிவகாஞ்சி காவல் நிலையத்திலும், தந்தை ரகுபதியை காஞ்சி தாலுகா காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 100 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 50 கூல்லிப் பாக்கெட்டுகள், 48 விமல் என மொத்தம் 198 தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, கைதான 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.