சென்னை: தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் அமைச்சர் கீதா ஜீவன் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு, கோடை விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தை தொடர்ந்தனர். இன்றும் 2வது நாளாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில் சென்னையில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அங்கன்வாடி சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு கலைந்து சென்றனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.