இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பு வாதத்தில்,‘‘நீட் தேர்வு தொடர்பாக ஒன்றிய அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக மாநில அமைச்சர் போராட்டம் அறிவிக்க முடியாது. நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். இதனால் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும். படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும். அதனால் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், கையெழுத்து இயக்கத்தை மக்கள் ஏற்கிறார்கள் என்றால் அதனை எப்படி தடுக்க முடியும். குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் இருக்கும் மாணவர்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும். நாம் எதனையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இதில் முன்னதாக கையெழுத்து இயக்கத்திற்கு உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது. அதனால் இதில் உச்ச நீதிமன்றம் தலையிட விருப்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள், மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.