சென்னை: நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்துள்ள 40 நாட்களுக்கு முன்னதாக இந்தப் பயிற்சி தொடங்குகிறது. ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் சார்ந்த பயிற்சிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் மாவட்ட அளவில் தேர்வு சார்ந்த பயிற்சிகள், தேர்வுகள் நடைபெற உள்ளன. திங்கள் முதல் சனிக் கிழமை வரை 6 நாட்கள் காலை 9.15 முதல் மாலை 4.30 வரை நீட் பயிற்சி வகுப்பு நடைபெறும். இதற்காகத் தமிழகம் முழுவதும் விண்ணப்பித்த 13,304 பேர் பயிற்சி பெற உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 330 மையங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருவதற்கான பேருந்து கட்டணத் தொகை மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். காலை சிற்றுண்டி 8.30 மணி முதல் 9 மணி வரை வழங்கப்படும். ஒவ்வெரு சனிக்கிழமை அன்றும் காலை 9.15 மணி முதல் 10.45 மணி வரை திருப்புதலும் அதைத் தொடர்ந்து 11 மணி முதல் 12.40 மணி வரை வாராந்திரத் தேர்வுகளும் நடைபெறும். மதிய உணவு இடைவெளிக்குப்பின் பிற்பகலில் கலந்துரையாடல் மற்றும் உக்கமளிப்பு அமர்வுகளும் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பயிற்சியின் இறுதியில் மொத்தம் 3 திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.