புதுடெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட்-இளங்கலை நுழைவு தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதோடு, வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. எனவே நீட் இளங்கலை தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செவ்வாயன்று இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பதிவில்,‘‘தேர்வின் புனித தன்மையில் முறையான மீறல் எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ஒன்றிய அரசையும் நம்பவில்லை. உச்சநீதிமன்றத்தையும் நம்பவில்லை. நீட் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மாணவர்களுக்கான தோல்வியல்ல. காங்கிரசின் பொறுப்பற்ற அணுகுமுறை, பொய் மற்றும் கீழ்த்தரமான அரசியலின் தோல்வியாகும். ராஜஸ்தானில் பாஜ ஆட்சிக்கு முன் நடந்த வினாத்தாள் கசிவு குறித்து கார்கேஜிக்கு தெரியாதா? வினாத்தாள் கசிவு மற்றும் ஊழலின் தந்தையே காங்கிரஸ் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.