டெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையற்றினார். மக்களவையில் புதிதாக தேர்வான எம்பிக்கள் தற்போது பதவியேற்ற நிலையில் கூட்டு கூட்டத்தில் திரெளபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அப்போது புதிய மருத்துவக் கல்லூரிகள் குறித்து திரெளபதி முர்மு பேசும் போது, நீட்.. நீட் என எதிர்கட்சிகள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து முர்மு, ” தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றியுள்ளது.
வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.வினாத்தாள் கசிவு பிரச்சனைகளை களைய கட்சி, அரசியலைத் தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார். இந்தாண்டு நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் காரணமாக அதை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.