கும்பகோணம்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கும்பகோணத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக தலைமையிலான தமிழக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிப்படி, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டத்தை நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிவித்திட வேண்டும். தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப் பெறுவதில் அரசியல் கூடாது. கடந்த மே, ஜூன் மாத கடும் மழையால் நெல், வாழை, பருத்தி, எள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
எனவே உரிய கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்குரிய இழப்பீட்டினை உடன் வழங்க வேண்டும். நீட் தேர்வு உள்ளிட்ட கல்வி தேர்வுகளில், ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் தவறுகள் நடக்க கூடாது. அப்படி நடந்தால் உரிய விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.