புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்யவும், ஒன்றிய அரசு நடத்தும் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்கவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக(ஜெ.என்.யூ) மாணவர்கள் ஜந்தர்மந்தரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது, “முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், மாணவர்களின் தகுதியை நிர்ணயிக்க தேர்வுகளை மையமாக வைப்பதை கைவிட வேண்டும்” என்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினர்.