நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடெல்லி: நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிந்ததா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இத் தேர்வை 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததால், இந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்;

மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்; நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, சனிக்கிழமைக்குள் (நேற்று முன்தினம்) நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) உத்தரவிட்டு வழக்கை திங்கள்கிழமைக்கு (இன்று) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒத்திவைத்தார். அதன்படி, சனிக்கிழமை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக முடிவுகளை என்டிஏ வெளியிட்டது. தொடர்ந்து, இன்று காலை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

அப்போது, மனுதாரர் தரப்பில், ‘நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24ம் தேதி அனுப்பியுள்ளது, ஆனால், மே 3ம் தேதி தான் வங்கி லாக்கருக்கு சென்றுள்ளது. அதுவரை தனியார் அமைப்பின் கைகளில்தான் வினாத்தாள் இருந்துள்ளது. வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை’ என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கிடையே, முக்கிய பிரச்னையை விவாதிக்குமாறு தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ‘பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார். தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனுதாரர்கள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை