நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் முன்கூட்டியே விதை விட்ட சம்பா நடவு பணி தொடக்கம்

*நாற்று பறிப்பு பணியில் பெண் தொழிலாளர்கள் மும்முரம்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் முன்கூட்டியே விதை விட்ட சம்பா நடவு பணி துவங்கியது. நாற்று பறிப்பு பணியில் பெண் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சுமார் 16,500 ஏக்கரில் கோடை சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி முடித்து அறுவடை செய்தனர். தொடர்ந்து சுமார் 34 ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீர் மற்றும் மின் மோட்டாரை பயன்படுத்தி சிலர் முன் கூட்டியே பல்வேறு ரக நெல்களை சாகுபடி செய்தனர்.

சில விவசாயிகள் தாமதமாக கொஞ்சம், கொஞ்சமாக விவசாயப் பணியை தொடங்கினர். முன் கூட்டியே குறுவை சாகுபடி செய்த சித்தமல்லி, பூவனூர் தட்டித் தெரு பகுதி, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதிர்ந்து பழுத்த நெல் மணிகளை இயந்திரம் மூலம் தற்போது அறுவடையை விவசாயிகள் படிப்படியாக தொடங்கியுள்ளனர்.

தாமதமாக சாகுபடி தொடங்கிய குறுவை சாகுபடி வயல்களில் தற் போது நெல் மணிகள் முதிர்ந்தும், கதிர்கள் மட்டமாக முதிர்ந்தும் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த நெல் கதிர்கள் வரும் ஒரு மாதத்திற்குள் அறுவடை முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த அறுவடையும் முடிந்த உடன் அதே 34 ஆயிரம் ஏக்கரில் தாளடி மற்றும் சாகுபடியும் ஆற்றுநீரை பயன்படுத்தி சுமார் 10 ஆயிரம் ஏக்கரிலும் சம்பா சாகுபடி பணிகள் தொடங்க உள்ளது.

இந்நிலையில் நீடாமங்கலம் அருகில் உள்ள ஆதனூர் அண்ணா நகர் பகுதியில் விவசாயி வீரபாஸ்கர் என்பவர் அந்தமான் பண்ணை பகுதியில் முன் கூட்டியே சம்பா சாகுபடிக்கு விட்ட நாற்றுகளை பறித்து பெண் தொழிலாளர்கள் மும்முரமாக நடவு பணியில் ஈடு பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!

பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்