Tuesday, September 24, 2024
Home » கடிவாளம் வேண்டும்

கடிவாளம் வேண்டும்

by Neethimaan
Published: Last Updated on

தமிழக மீனவர்கள், எத்தனை காலத்துக்கு செத்து செத்து பிழைப்பது. இந்திய குடிமக்களை காப்பாற்ற வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறதா, இல்லையா என கேள்வி எழுகிறது. ஒவ்வொரு வாரமும் மீனவர்களை கைது செய்வதும், பல லட்சம் மதிப்புள்ள வலைகள், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பறிக்கப்பட்டால் அவர்கள் வாழ்வது எப்போது? அவர்களின் குடும்பத்தின் நிலை பரிதாபத்துக்கு உள்ளாகிறது. கடந்த 10ம் தேதி நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகின் மீது மோதி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் படகில் ஏறியும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ வலைகளை பறித்துக்கொண்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ஒரு விசைப்படகையும் அதில் பயணித்த 8 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். வழக்கம் போலவே இந்திய அரசாங்கம், டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை அழைத்து, “தமது அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும்” தெரிவிக்கிறது. ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 185 விசைப்படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது நாட்டு படகுகளையும் குறிவைத்து தாக்கப்படுவதும் அல்லது மோதி மூழ்க செய்வதுமான இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தமிழக மீனவர்கள் போராடி வரும் நிலையில், நேற்று நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை கைது செய்து ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது. இதற்கும் ஒருபடி மேல் சென்று கடந்த ஜூன் 25ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 மீனவர்களை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்தது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது படகு மோதி இலங்கை கடற்படை வீரர் ரத்நாயக உயிரிழந்ததாக காங்கேசன் துறை காவல் நிலைய போலீசார் கூறுகின்றனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும். அதிகளவில் அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் இலங்கையின் 9வது அதிபராக அனுர குமார திசநாயக நேற்று பதவியேற்றுக்கொண்டார். புதிய அரசு அமையும் போது இந்தியா அரசு ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு இலங்கை கடற்படைக்கு கடிவாளம் போட வேண்டும் என்பதே மீனவர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

You may also like

Leave a Comment

eleven − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi