திருமங்கலம் அருகே வைக்கோல் படப்பாக மாறிய பயணிகள் நிழற்குடை: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே வைக்கோல் அடுக்கிவைக்கும் படப்பாக பயணிகள் நிழற்குடை மாறியுள்ளதால் பயணிகள் வெயிலில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் அமைந்துள்ளது காண்டை விலக்கு பஸ் ஸ்டாப். திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி, தங்களாசேரி, காங்கேயநத்தம் மற்றும் தேனி, போடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த ஸ்டாப்பில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வருகின்றன. இதன் காரணமாக காண்டை விலக்கு பகுதியில் பயணிகளின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. வெயில் மழை உள்ளிட்டவைகளிலிருந்து பயணிகள் தப்பித்து நிம்மதியாக நிழற்குடையில் நின்று பஸ் ஏறி சென்றுவந்தனர். இந்நிலையில் தற்போது காண்டை விலக்கு பயணிகள் நிழற்குடையில் கால்நடை தீவனமான வைக்கோல் அடுக்கிவைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த இயலவில்லை. இதனால் பயணிகள் நிழற்குடைக்கு வெளிபுறத்தில் நின்று பஸ்களில் ஏறும் நிலை உள்ளதால் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடைக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை

பிரசந்தா பதவி விலக வேண்டும்; நேபாளி காங்கிரஸ் கோரிக்கை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிரதமர் முடிவு?