புதுடெல்லி: நாடும் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் என்சிஇஆர்டியின் அலட்சியத்தால் 3 புத்தகங்கள் இல்லாமல் 6ம் வகுப்பு மாணவர்கள் தவித்து வருகின்றனர். தேசிய கல்விக்கொள்கை 2020ன்படி, 3 முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கும் பணிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) ஈடுபட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் இந்த புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்றும் 3 மற்றும் 6 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் வழங்கப்படும் என்று என்சிஇஆர்டி அறிவித்தது.
தற்போது பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தற்போது வரை 6ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அதேபோல், தெலுங்கு, இந்தி மற்றும் உருது உள்ளிட்ட பல்வேறு மொழிப்பாட புத்தகங்களும் தற்போது வரை அச்சிடப்படவில்லை. ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்கள் படித்து வருகின்றனர். என்சிஇஆர்டியின் அலட்சியத்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.