கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் 8ம் வகுப்பு பயிலும் 13வயது மாணவி போலி பயிற்சியாளர் சிவராமனால், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் கைதாவதற்கு முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிவராமன், சிகிச்சை பலனின்றி, கடந்த மாதம் 23ம் தேதி உயிரிழந்தார். இதை தொடர்ந்து வேறு ஒரு தனியார் பள்ளியில் சிவராமனால் நடத்தப்பட்ட போலி முகாமில் கலந்து கொண்ட, 14வயது மாணவியும் பாலியல் துன்புறுத்தலுக்குட்பட்டது தெரிந்தது. தொடர்ந்து அப்பள்ளியின் பெண் முதல்வரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிவராமனால் நடத்தப்பட்ட போலி முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளரும், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்சிசி பயிற்சியாளருமான கோபு (47) என்பவரை, சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறும்போது, சிவராமன் நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு உறுதுணையாக கோபு இருந்துள்ளார். போலி முகாம்களில் கோபுவும் கலந்து கொண்டதாக புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர்.