சென்னை: மயிலாப்பூரில் திருக்கோயில்கள் சார்பில் நவராத்திரி பெருவிழா, கடந்த 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடும், இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருக்கோயில்கள் சார்பில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், திருஅருட்பிரகாச வள்ளலார், தெய்வ புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினை தொகுத்தவரான ஸ்ரீமத்நாதமுனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தார் ஆச்சாரியார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
நேற்று நடைபெற்ற 5ம் நாள் நிகழ்ச்சியில் அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடன் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் சுசித்ரா பாலசுப்ரமணியம் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர், கோவை – பேரூர் பட்டீசுவரர், திருவண்ணாமலை அருணாசலேசுவரர், தஞ்சாவூர் பிரகதீசுவரர், திருநெல்வேலி நெல்லையப்பர் ஆகிய திருகோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.