இயற்கையான முறையில் குளியல் பொடி!

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அதுவும் அழகான முகத்தைப் பெற எல்லோருக்குமே ஆசை உள்ளது. பலர் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயனம் கலந்தக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். இதனால் முகம் பொலிவுப் பெறுகிறதோ இல்லையோ சருமம் பாதிப்புக்கு உள்ளாகிறது. சருமத்தைப் பாதுகாக்க இனி கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் நம்மிடம் இருக்கும் மூலிகைகளைக் கொண்டு குளியல் பொடி தயாரித்து மேனி அழகைப் பாதுகாக்கலாமே!

குளியல் பொடிக்குத் தேவையானப் பொருட்கள்:

ஆவாரம்பூ – 150 கிராம் (காயவைத்தது), செம்பருத்திப்பூ – 15 (காயவைத்தது), மரிக் கொழுந்து – 100 கிராம் (காயவைத்தது), பன்னீர் ரோஜா ½ கிலோ, எலுமிச்சை தோல் – 150 கிராம் (காயவைத்தது), வெட்டிவேர் – 100 கிராம், கோரைக் கிழங்கு – 50 கிராம், வசம்பு 50 கிராம், மகிழம்பூ – 100 கிராம், பாசிப் பயறு – ¼ கிலோ, பூலான் கிழங்கு 100 கிராம்,கார்போக அரிசி – 100 கிராம்.

செய்முறை: ஆவாரம்பூ செம்பருத்தி, மரிக்கொழுந்து, பன்னீர் ரோஜா, எலுமிச்சை தோல், வெட்டிவேர், மகிழம்பூ இவற்றை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். பின் காட்டன் துணியில் போட்டு நன்றாக வெயிலில் ஈரம் போக காயவைத்துக் கொள்ளவும். பின்பு கோரைக் கிழங்கு, வசம்பு, பாசிப்பயறு, பூலான் கிழங்கு, கார்போக அரிசி இவற்றை நன்றாக காயவைத்துக் கொள்ளவும். காய்ந்த பிறகு அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதைப் பெண்கள் மட்டும் உபயோகப்படுத்தினால் மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் மஞ்சள் சேர்க்க வேண்டாம்.

பயன்கள்: இந்தக் குளியல் பொடியைப் பயன்படுத்திக் குளிப்பதன் மூலம் சொறி, சிரங்கு குணமாகும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நீங்கி முகம் பளப்பளக்கும். ஆவாரம் பூ சருமத்தில் உள்ளக் கருமை நிறத்தைப் போக்கி, சீரான நிறத்தைக் கொடுக்கும். பாசிப்பயறு முகத்திற்கு அழகைக் கூட்டுவதற்கு உதவும். வியர்வை நாற்றத்தைக் குறைக்கவும் இந்தக்குளியல் பொடி உதவும்.

பயன்படுத்தும் முறை: இந்தப் பொடியை ரோஸ்வாட்டர் அல்லது தயிர் அல்லது தண்ணீருடன் சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். ½ மணி நேரம் கழித்து இதைப் பயன்படுத்தலாம். சோப்புப் போட்டு குளித்தப் பின் இந்தக் குளியல் பொடியை போட்டுக் குளிக்கலாம். அல்லது சோப்பு சேர்க்காமலும் இந்தப் பொடியை வைத்து மட்டுமே குளிக்கலாம்.இதனை சரியான மூலதனத்துடன் திட்டமிட்டால் விற்பனை செய்தும்வருமானம் ஈட்டலாம். பெருகி வரும் மாசு, உணவில் கலப்படம் என சரும ஆரோக்கியத்துக்கு இன்று அவரவர் சக்திக்கு ஒரு தொகையை செலவு செய்தாக வேண்டிய சூழல் இருக்கிறது. இவ்வேளையில் இப்படியான இயற்கை குளியல் பொடிகள் சருமத்துக்கு ஆரோக்கியம் தருவதோடு நல்ல வருமானமும் கொடுக்கும். இன்ஸ்டாகிராம், முகநூல் என இந்தக் குளியல் பொடிகளை விற்பனைக்குக் கொண்டு வரலாம். மேலும் வாடிக்கையாளர்களின் அனுபவங்களைப் பெற்று யூடியூப்பில் பகிர அதன் மூலமும் கணிசமான வருமானம் கிடைக்கும்.
– என். குப்பம்மாள்

Related posts

நான்முதல்வன் திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியாகிறது

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி