நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்றம்பள்ளி ஒன்றியம் கே.பந்தாரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு சில மாதங்களே எரிந்தது. அதன்பிறகு தற்போது வரை எரியாமல் பழுதான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இரவு நேரங்களில் முதியவர்கள், பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் அப்பகுதியில் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே எரியாத உயர் கோபுர மின்விளக்கை உடனே சீரமைத்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.