ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீனவர்களை பாதுகாக்க ஏர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை நடந்து வருவதாகஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஒன்றிய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா நேற்று ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜெட்டிப்பாலம் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றார். அங்கு நாட்டுப்படகு, விசைப்படகு சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் பங்கேற்ற ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது, ‘‘ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அரசு ரூ.38,500 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இலங்கையில் உள்ள படகுகளை விடுவிப்பது, மீனவர்கள் பிரச்னை குறித்து இருநாட்டு அதிகாரிகள் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழுவின் மூலம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடுக்கடலில் மீனவர்களின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர்) வசதி ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். பல்வேறு மாநில கடல் பகுதியில் மீன் பிடித்து கரைக்கு செல்லும் வகையில் தேசிய மீனவர் அடையாள அட்டை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்’’ என்றார்.