தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால் உடனே நிதி: சொல்கிறார் எச்.ராஜா

மதுரை: மதுரையில் தமிழக பாஜ ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் 16 ஆயிரம் பள்ளிகளை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேலாக தர வேண்டும். இதன் விதிப்படி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும். தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மறுநாள் காலையே ஒன்றிய அரசின் கல்வி நிதி வந்தடையும்.

நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்தப்பட்டது. நீட் விலக்கு வேண்டுமானால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்ய வேண்டும். பாஜ மது அருந்தாத உறுப்பினர்களை கொண்ட கட்சி என்பதால், மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என திருமாவளவன் நினைத்து இருக்கலாம். விஜய்யின் கொள்கை என்பது நீட்டை எதிர்ப்பது, கல்வியை பொது பட்டியலுக்கு கொண்டு வருவதாகும். ஆகவே, விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவிற்கு பாதிப்பில்லை.இவ்வாறு கூறினார்.

* ‘திருமாவளவன் பார்வையில் கோளாறு’
சேலத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: மது ஒழிப்பு என்று யார் வந்து போராடினாலும் எங்களுக்கு சந்ேதாஷம்தான். இதை அரசியலாக்கி ஆதாயம் தேட யாரும் முயற்சி செய்யவேண்டாம். திருமாவளவன் நடத்தும் மாநாட்டிற்கு பாஜ., வுக்கு மட்டும் அழைப்பு விடுக்கமாட்டேன் என்று கூறுவது அவரது பார்வையில் கோளாறு இருப்பதை காட்டுகிறது. கூட்டணி என்பதை யாரும் கட்டி வைக்க முடியாது. அரசியலில் பகையாளி என்று யாரும் இல்லை. தமிழகத்தின் நன்மைக்காக அனைவரும் சேர்ந்து போராட வேண்டும். தேசிய கல்விக்கொள்கையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும், என்ன தேவை என்பதை எதிர்க்கட்சிகள் சொல்லவேண்டும். பிரதமர் அடிக்கடி தமிழகத்திற்கு வரவேண்டும். அதிகளவில் திட்டங்களை கொண்டு வரவேண்டும். இதன்மூலம் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக உருவாகும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி