செங்கல்பட்டு: எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில், தமிழ் வளர்ச்சியில் வைணவத்தின் பங்கு பற்றிய தேசிய கருத்தரங்கம் நடந்தது. தமிழ் வளர்ச்சியில் சமயங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. சைவ சமயத்தைச் சேர்ந்த நாயன்மார்களும், வைணவ சமயத்தைச் சேர்ந்த ஆழ்வார்களும் அருளிய பாசுரங்கள் தமிழ் மொழியின் பொக்கிஷங்களாக போற்றப்படுகின்றன. அவர்களின் அரிய தமிழ் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் சார்பில் கடந்தாண்டு தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இந்தாண்டு தமிழ் வளர்ச்சியில் வைணவத்தின் பங்கு என்பது பற்றிய தேசிய கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து ஜீயர் சுவாமிகள், வைணவ பீடங்களின் மடாதிபதிகள், வைணவ கோயில்களில் குருக்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கம் தொடக்க விழா சிற்றரங்கில் நடைபெற்றது. இதில், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் பொன்னுசாமி வரவேற்றார். முன்னதாக கருத்தரங்கின் நோக்கம் பற்றி எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம் அமைப்பின் தலைவர் நாகராஜன் மற்றும் எஸ்ஆர்எம் வேந்தரும், பெரம்பலூர் மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர ஆகியோர் பேசினர்.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.