உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், மேட்டத்தூர் கிராமம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் J.S.நகர் அருகில் இன்று (25.09.2024) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் TN73 M 8384 என்ற பதிவெண் கொண்ட வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இராணிப்பேட்டை மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவி (வயது 60) த/பெ.குணசேகர், செல்வம் (வயது 50) த/பெ.பச்சையப்பன், ராமலிங்கம் (வயது 50) த/பெ.குப்புசாமி, முருகன் (வயது 44) த/பெ.ராஜகோபால், துரை (வயது 35) த/பெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சக்தி (வயது 20) த/பெ.மகேந்திரன் ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு செப்.27-ம் தேதி முதல் முறைப் பாசனத்தை அமல்படுத்த நீர்வளத்துறை உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

உரிமையாளர்களின் அலட்சியத்தால் திருவள்ளூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்து