பெரியகுளம்: பெரியகுளத்தில் காரில் கடத்திய போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டி புறவழிச்சாலையில் பெரியகுளம் வடகரை போலீசார் நேற்று நள்ளிரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. காரில் 3 பேர் இருந்தனர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் காரை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது காரில் மெத்தபட்டமைன் என்ற போதைப்பொருள் 30 பாக்கெட்டுகளில் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், கார் மற்றும் போதைப்பொருளை பறிமுதல் செய்து பெரியகுளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.