நன்னிலத்தில் மக்கள் நேர்காணல் முகாம் 275 பேருக்கு ₹1 கோடியில் நல உதவி

*பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 275 பயனாளிகளுக்கு ரூ 98 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா ஆலங்குடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் ஆலங்குடி, முடிகொண்டான், நெம்மேலி ஆகிய ஊராட்சிகளுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் 275 பயனாளிகளுக்கு ரூ.98 லட்சத்து 86 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது: மக்கள் நேர்காணல் முகாம் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நேர்காணல் முகாமின் குறிக்கோளானது அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்து துறையின் துறை அலுவலர்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவதே ஆகும்.

துறை வாரியான திட்டங்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு பயன்பெறலாம். மேலும், அரசு அனைவருக்கும் பட்டா வழங்க தயாராக உள்ளது. இதற்கு நீர்நிலை மற்றும் சாலை ஓரங்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய இடத்தில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்க முடியாத நிலை உள்ளது. இதில் வசிப்பவர்கள் மாற்று இடங்களில் இடம் கேஎட்டு கோரிக்கை வைத்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் கர்ப்பிணி தாய்மார்கள், தமிழக அரசால் வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள ஊட்டச்சத்து பொருட்களை தவறாது உட்கொள்ள வேண்டும். கர்ப்பக்காலத்தில் நீங்கள் எடுத்துகொள்ளும் உணவுப்பொருட்களை உங்களுக்கு உடல் பலத்தையும், மன பலத்தையும் தரவல்லது. எனவே, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படுவதை கர்ப்பிணி தாய்மார்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு தன்னை பேணிக்கொள்ள வேண்டும்.

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் பெண்கள் தங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ. ஆயிரம் பணத்தினை தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும், இன்றைய தினம், நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், வருவாய்த்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் (2024-25)ன் கீழ் 25 தகுதியான பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டிக்கொள்வதற்கான நிர்வாக அனுமதிக்கான ஆணையும், 60 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் இலவச விலையில்லா வீட்டுமனைப்பட்டாவும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை 10 பயனாளிகளுக்கு என மொத்தம் ரூ.86 ஆயிரம் மதிப்பீட்டில் உதவித்தொகைக்கான ஆணையும், முதியோர் உதவித்தொகை,

தற்காலிக இயலாமை உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை என 6 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 7 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் உதவித்தொகைகளுக்கான ஆணையினையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம்- மதிப்பீட்டில் இறப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகைக்கான ஆணையும்,

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ. 30 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.13 ஆயிரம் மதிப்பீட்டில் பாரம்பரிய நெல் ரத்தசாலி, சிங்சல்பேட், திரவ உயிர் உரம், உளுந்து விபிஎன் 8, தூயமல்லி நெல், ஆடாதொடாகன்று, சூடாமோனஸ் 3கி, நெல் நுண்ணூட்டம் 5 கி உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களும்,

முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் சாலை விபத்தில் இறந்த நபரின் குடும்பதாரருக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையும், 138 பயனாளிகளுக்கு இலவச மின்னணு குடும்ப அட்டையும் என 275 பயனாளிகளுக்கு ரூ.98 லட்சத்து 86 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது இந்த நலத்திட்ட உதவிகளை பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றமடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், ஆர்.டி.ஒ சௌம்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர் பற்றி திடுக்கிடும் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன், அஞ்சலை உட்பட15 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

தங்கம் விலையில் மாற்றம் சவரன் மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது