நங்கநல்லூரில் கோயிலை ஜாக்கி மூலம் உயர்த்தும் பணி மண்டபம் சரிந்து தொழிலாளி பரிதாப பலி: உண்மையை மறைத்து போலீசாருக்கு தகவல்

ஆலந்தூர்: நங்கநல்லூரில் கோயிலை 5 அடி உயரத்திற்கு ஜாக்கி மூலம் தூக்கி நிறுத்தும் பணியின்போது, சுவர் சரிந்ததில் வடமாநில வாலிபர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசாரிடம் உண்மையை மறைத்த கோயில் நிர்வாகியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நங்கநல்லுார், ராம்நகரில் உத்தர குருவாயூரப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் சாலை மட்டத்தில் இருந்து மிகவும் தாழ்ந்து காணப்படுவதால், மழைக் காலங்களில் வெள்ளநீர் கோயிலுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் புதிய தொழில்நுட்ப முறையில் கோயிலை, ஜாக்கி மூலம் தூக்கி நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பணி தொடங்கியது. இதில் கர்ப்பக்கிரகம், உள் சன்னதி என அனைத்தும், தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயரம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோயில் மண்டபத்தின் பின் பகுதியில் ஜாக்கி மூலமாக உயர்த்தி வைக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஜாக்கிகள் விலகி பின்புற மண்டபம் திடீரென சரிந்து கீழே விழுந்தது. இதனைக்கண்டு அதிச்சியடைந்து அங்கு பணியில் இருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் அலறியபடி வெளியே ஒடிவர முயன்றனர். இதில், ஒருவர் மட்டும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். பலத்த காயம் அடைந்த அவரை கோயில் நிர்வாகத்தினர குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராஜுவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானவர் உத்திரபிரதேஷ் மாநிலம் கேஷ் வாரி நைனாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிராம் (21) என்பது தெரியவந்தது. மேலும் உரிய பாதுகாப்பு வசதியின்றி கோயிலை தூக்கி வைக்கும் பணி நடந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தவறான தகவல் கொடுத்த கோயில் நிர்வாகி: இடிபாடுகளுக்குள் சிக்கிய வடமாநில ஊழியர் ஹரிராம் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, கோயில் பெண் நிர்வாகி ஒருவர் ஹரிராமுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சை முடிந்து தங்கும் இடத்திற்கு ஒவ்வெடுக்க சென்றுவிட்டார் என்பதை மட்டும் கூறி போலீசாரை அனுப்பி விட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிராம் பலியான தகவல் வந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணை நடத்த வந்த போலீசாரிடம் உண்மையை மறைத்து லேசான காயம் என தவறான தகவல் கொடுத்தது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு