நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குஜராத் மருத்துவ குழுவினர் ஆய்வு

கூடுவாஞ்சேரி: நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 50 பேர் கொண்ட குஜராத் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, 30 படுக்கை அறையுடன் கூடிய பிரசவ வார்டு, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த சுகாதார நிலையத்தில், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்திலிருந்து மாநில அளவிலான இணை இயக்குனர்கள் 50 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தமிழகத்தில் உள்ள மருத்துவம் குறித்து அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து நேற்று முன்தினம் பார்வையிட்டு செய்தனர். இதில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், ஆனந்த் ஆகியோர் தலைமையில் மருத்துவமனை வளாகம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளில் மகப்பேறு மருத்துவம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, மலேரியா, தொழுநோய், காசநோய், குடும்ப நலம், மக்களை தேடி மருத்துவம், அறுவை சிகிச்சை, மனநலம் மருத்துவம், எலும்பு மருத்துவம், ஆய்வகம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட பொது மருத்துவம், ரத்ததான முகாம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, ஏராளமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

* தமிழக முதல்வருக்கு பாராட்டு
குஜராத்தில் இருந்து வந்த 50 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து மருத்துவ வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறந்த முறையில் மருத்துவ வசதி அளிக்கப்படுவதாகவும், இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில், நோயாளிகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தை பெற்ற
தாய்மார்களுக்கும் சிறந்த முறையில் மருத்துவ வசதி செய்து கொடுத்துள்ளார் என தமிழக முதல்வரை வெகுவாக பாராட்டினர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது