சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் எழும்பூர் எம்எல்ஏவுமான இ.பரந்தாமன் ஏற்பாட்டில் எழும்பூர் தொகுதி மக்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் ‘’நம்ம எக்மோர்’’ என்ற நவீன, ஒருங்கிணைந்த செயலியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று தொடங்கி வைத்தார். எழும்பூர் தொகுதி மக்கள் ‘’நம்ம எக்மோர்’’ என்ற இந்த நவீன ஒருங்கிணைந்த செயலியைப் பயன்படுத்தி, சட்டமன்ற உறுப்பினரை கைபேசி, வாட்ஸ்-அப் அழைப்பு வழியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், சட்டமன்ற உறுப்பினரின் சமூக வலைத் தளப் பக்கங்களுக்கும் செல்லலாம்.
தொகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். எழும்பூர் தொகுதியில் உள்ள அரசு அலுவலகம், காவல் நிலையம், ரேஷன் கடை, பூங்கா, விளையாட்டு மைதானம், அரசு மருத்துவமனை, வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகள், நிறுவனங்களின் முகவரி, இருப்பிடம் ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தொகுதி மக்கள் இச்செயலியைப் பயன்படுத்தி தமது புகார்களைப் பதிவேற்றம் செய்யலாம்.