நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமரப்பாளையத்தில் ஆவின் விற்பனையகத்தில் பால் பாக்கெட்டுகளை இளைஞர்கள் திருடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. குமாரபாளையம் அருகே பெருமாபாளையம் புதூர் பகுதியில் சபாபதி என்பவர் ஆவின் பால் விற்பனையகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதிகாலை 3மணியளவில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொண்டுவரப்படும் பால் பாக்கெட்டுகள் நிரப்பிய பெட்டிகள் இறக்கி வைத்து செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களாக பெட்டிகளில் இருந்து பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து காணாமல் போனதால் அதிருப்தி அடைந்த சபாபதி இதுகுறித்து ஆவின் நிறுவனத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடை வாசலில் சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணித்து வந்தபோது சம்பவத்தன்று அதிகாலையில் வெள்ளை நிற சாக்கு பைகளுடன் வந்த 2 இளைஞர்கள் பெட்டிகளில் நிரப்பி இருந்த பால் பாக்கெட்டுகளை திருடி சென்றது கண்டறியப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.