நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை: நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் “மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் தோரண வாயில் எனும் பெயரில் பழமையான அலங்கார வளைவு கட்டப்பட்டுள்ளது. அலங்கார வளைவு வழியாக மட்டுமின்றி அதன் ஓரங்களிலும் இடம் இருப்பதால், அதன் வழியாகவும் வாகனங்கள் முந்திச் செல்ல முயல்கின்றன.

இதனால், ஏராளமான விபத்துக்கள் நிகழ்வதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் காரணமாகிறது. ஆகவே பழைய நக்கீரர் தோரண வாயிலை அகற்றக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் தோரண வாயில் எனும் அலங்கார வளைவை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அகற்ற உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது; வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் விரும்பினால் சாலையில் இருபுறம் உள்ள நிலங்களை வாங்கி அரசுக்கு தந்து நுழைவாயிலை பாதுகாக்கலாம். அரசுக்கு ஒப்படைத்து நுழைவாயிலை பாதுகாத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கலாமே என்றும் நீதிபதிகள் யோசனை வழங்கினர். மதுரையை சுற்றி உள்ள அனைத்து நுழைவாயில்களும் வரலாற்றை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

நக்கீரர் நுழைவாயில் உலக தமிழ்ச் சங்கம் நடைபெற்றதை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டது என்று கூறினர். வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு உத்தரவிட்டது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்