நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதையொட்டி இன்று (8ம் தேதி) சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்காக அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘சிவகங்கை’ என்ற பெயரிடப்பட்ட கப்பல் சென்னை வழியாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் (6ம்தேதி) மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை வரும் 15ம் தேதிக்கு பின்னர் தொடங்கப்படவுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இன்று (8ம்தேதி) சோதனை ஓட்டம் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி கடந்தாண்டு தொடங்கி வைத்த கப்பல் சேவை, பலமுறை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பது இருநாட்டை சேர்ந்த வணிகர்கள், சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ‘சிவகங்கை’ என்ற பெயரிடப்பட்ட கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ₹5 ஆயிரம் கட்டணமும், பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு ₹7,500 கட்டணமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணிகள் கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்து செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்து செல்லவும் அனுதிக்கப்பட்டுள்ளது. sailindsri.com என்ற இணையதளத்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.