நாகை: நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி(56). மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த பிரதீப்(34), பிரகாஷ்(32), பிரவின்(30), திருமுருகன்(26) ஆகிய 4 பேரும் கடந்த 21ம் தேதி அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை கோடியக்கரைக்கு கிழக்கே 10 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 2 அதிவேக விசைப்படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர் 7 பேர் அங்கு வந்து நாகை மீனவர்கள் 4 பேரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் 500 கிலோ வலை, 4 ஜிபிஎஸ் கருவிகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை பறித்து கொண்டு அவர்களை விரட்டியடித்தனர்.
இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதில் 4 மீனவர்களும் காயமடைந்தனர். பின்னர் கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து மீனவ பஞ்சாயத்தாரிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பஞ்சாயத்தார் கொடுத்த புகாரின்பேரில் நாகை கடலோர காவல் குழும போலீசார் செருதூர் வந்து பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.