தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவையை இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து இலங்கையில் காங்கேசன் துறைமுகத்திற்கு 155 பயணிகள் பயணிக்கும் வகையில் விரைவு பயணிகள் கப்பல் சேவையை தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் ஒன்றிய அரசின் துறைமுகங்கள் கப்பல் மற்றும் நிரவழிப் போக்குவரத்து துறை இணைந்து தொடங்க திட்டமிடப்பட்டது.
அதேபோல், செரியாபாணி என்ற கப்பல் கேரள மாநிலம் கொச்சியில் தயாரிக்கப்பட்டு கடந்த வாரம் சனிக்கிழமை நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. சோதனை ஓட்டம் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் அன்று கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் தொடங்கியது. துவக்க விழா நிகழ்வில் மத்திய துறைமுக கப்பல் மற்றும் நீர் வழிகள் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்தா சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்ட செரியாபாணி கப்பல், தற்போது இலங்கை காங்கேசன் சென்றடைந்துள்ளது. 4 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து பயணிகள் இலங்கையை சேர்ந்துள்ளனர். காங்கேசன் துறைக்கு வந்துள்ள பயணிகளை இலங்கையில் உள்ள அமைச்சர்கள் மலர் மாலையை அணிவித்து வரவேற்றனர்.
இலங்கை சென்றுள்ள பயணிகள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்புவதற்கான கப்பல் மதியம் 2 மணிக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கப்பலில் பயணம் செய்வதற்கு விமான நிலையத்தில் பின்பற்றக்கூடிய அனைத்து பாதுகாப்புகளும் பின்பற்றப்பட்டு பலத்த சோதனைகளுக்கு பிறகே பயணிகள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். நாளை முதல் நாகையிலிருந்து 7.30 மணிக்கு இலங்கைக்கும், இலங்கையிலிருந்து மதியம் 2 மணிக்கு நாகைக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.