உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பட்டஞ்சேரி கிராமத்தில் திருபட்டைய நாதேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. உத்திரமேரூர் அடுத்த பட்டஞ்சேரி கிராமத்தில் திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை திருபட்டைய நாதேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கடந்த 2 நாட்களும் புண்யாவாசனம், வாஸ்துஹோமம், சாந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை மூன்றாம் கால யாக வேள்வி பூஜை முடிந்து பின்னர், மேளதாளங்கள் முழுங்க வாணவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க கும்பாபிஷேக நடந்தது. இந்நிகழ்ச்சியையொட்டி, கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த விழாவையொட்டி பட்டஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.