சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7.3.2023 அன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் பட்ஜெட் உரையில், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கி பணி தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான 6 மாத கால பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக ‘நான் முதல்வன் ரயில்வே மற்றும் வங்கி பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிட பயிற்சியை’ துவங்க உள்ளது. பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக வருகிற 14ம் தேதி அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கி தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுகளுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும். இந்த நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையை படித்து பார்த்து, இன்று (8ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.6.2024. நுழைவு சீட்டு ஜூலை 7ம் தேதியும், ஜூலை 14ம் தேதி தேர்வும் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.