சேலம்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் தாதகாப்பட்டி திருஞானம் முதல்தெருவை சேர்ந்தவர் குமரேசன்(49). நாம் தமிழர் கட்சியின் தெற்கு தொகுதி மாவட்ட முன்னாள் துணைத்தலைவர். சேலம் சங்கீத் தியேட்டர் அருகே ஆட்டோமொபைல்ஸ் உதிரிபாக கடை வைத்துள்ளார். இவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து, சமூகவலைதளங்களில் அவதூறான தகவல்களை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேலம் 56வது வட்ட திமுக செயலாளர் முருகேசன், செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா ஆகியோர் நேற்று இரவு குமரேசனை கைது செய்தனர். இவர் மீது அவதூறு பரப்புதல், புகழுக்கு களங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.