கூடுவாஞ்சேரி அருகே கல்லூரி மாணவர் மர்ம மரணம்: கொலையா, தற்கொலையா? என விசாரணை

கூடுவாஞ்சேரி: சென்னை-திருச்சி ஜிஎஸ்டி சாலையில், கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரியில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் விடுதி அறையில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இங்கு விடுதி கட்டணம் அதிகம் என்பதால், ஒருசில மாணவ-மாணவிகள் அருகில் உள்ள மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, தைலாவரம், வல்லாஞ்சேரி, கூடுவாஞ்சேரி பகுதிகளில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்து வாடகைக்கு குடியிருந்து, அக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரியில் 15 மாடிகள் கொண்ட ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் உள்ள வீட்டில் பொத்தேரி தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர். இந்நிலையில், அந்த தனியார் விடுதியின் 7வது மாடியில் இருந்து இன்று காலை சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு கல்லூரி மாணவர் கீழே குதித்து மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கல்லூரி மாணவரின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இப்புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கல்லூரி மாணவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை போதை பொருள் விற்பனை காரணமாக ஏற்பட்ட முன்விரோத தகராறில் யாரேனும் கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related posts

கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விசாரணைக்கு ஆஜர்

இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது: சீமான் பேட்டி

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு