மயிலாப்பூர், பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயிலில் குண்டு மிரட்டல்

சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியில் வித்யா மந்திர் பள்ளி இயங்கி வருகிறது. மொஹரம் பண்டிகை என்பதால் நேற்று பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் அலுவலக பணிகள் வழக்கம் போல் இயங்கியது. இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு வித்யா மந்திர் பள்ளிக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் இன்னும் சற்று நேரத்தில் உங்கள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வெடிக்கும் என்றும், அதேபோல் பட்டினப்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கும் வெடிகுண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. உடனே பள்ளி நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்படி மயிலாப்பூர் போலீசார் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வித்யா மந்திர் பள்ளி முழுவதும் சோதனை செய்தனர். அதேபோல் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் மற்றொரு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டு பள்ளிகளுக்கு வந்த இ-மெயிலை வைத்து விசாரணை நடத்திய போது, ஓவியா உதயநிதி என்ற பெயரில் இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது தெரியவந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் பிரிவின் உதவியுடன் மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது

செருப்பை கழற்றிவிட்டு வரும்படி கூறிய டாக்டருக்கு சரமாரி அடி, உதை