Wednesday, September 18, 2024
Home » மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் தேவநாதன் மீது 3000 புகார்கள் குவிந்தன: மேலும் ஒரு கூட்டாளி கைது

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் தேவநாதன் மீது 3000 புகார்கள் குவிந்தன: மேலும் ஒரு கூட்டாளி கைது

by Ranjith

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த மற்றொரு இயக்குநரான சுதிர் என்பரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இதுவரை தேவநாதன் யாதவ் மீது 3 ஆயிரம் பேர் ரூ.301 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக புகார் கொடுத்துள்ளனர். சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகள் பழமையான தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.525 கோடி அளவு முதலீடு செய்திருந்தனர்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீட்டாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சரியாக முதிர்வு தொகை மற்றும் வட்டி கொடுக்காமல் இழுத்து அடித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த தேவநாதன் யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகளான குணசீலன், மகிமைநாதன், சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை கடந்த ஜூலை 14ம் தேதி கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உட்பட 3 பேரை போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தேவநாதன் யாதவ் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளியான மற்றொரு இயக்குநர் சுதிர் (47) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதுவரை மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக 3 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.301 கோடி அளவுக்கு புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுதிர், தேவநாதனின் நெருங்கிப் பழகி வந்ததுடன், தேவநாதனின் நேர்முக உதவியாளராகவும், இயக்குநராகவும் இருந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளதால் போலீசார் அவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் சிலருக்கு வலைவீசப்பட்டு வருகிறது. இந்த மோசடி தொடர்பாக தேவநாதன் யாதவ் மற்றும் அவரது கூட்டளிகளின் சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் தேவநாதன் வலது கரமாக இயங்கிய சாலமன் மோகன்தாஸ் தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi