கமுதி : கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கோயில் திருவிழாவில் 2,000 கிலோ ஆட்டுக்கறி, 1,500 கிலோ அரிசியில் கமகம அசைவ விருந்து தயார் செய்யப்பட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி திருவிழாவில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வழங்கிய ஆடுகளை பலியிட்டு அசைவ விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு கோயில் முன்பு பக்தர்கள் வழங்கிய 103 ஆட்டுக்கிடாய்கள் பலியிடப்பட்டன.
தொடர்ந்து 2,000 கிலோ கறி, 1,500 கிலோ அரிசி சாதம் சமைக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 வரை கமகம அசைவ விருந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களும் சரிசமமாக கலந்து கொண்டு சாப்பிட்டனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.