Saturday, September 28, 2024
Home » அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை..!!

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை..!!

by Nithya
Published: Last Updated on

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (07.06.2024) ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்துக் கொள்ள இந்தியாவிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் வருகைதரும் சமயப் பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருதல், ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்து ஆய்வு மலரில் வெளியிடப்படவுள்ள சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் குறித்த தேர்வுக் குழுவின் பணிகள், அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகப் பெருமானின் திருக்கோயில்களை காட்சிப்படுத்தும் வகையிலான அரங்குகளை அமைத்தல், மாநாட்டில் சமய பெரியோர்களின் உரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துதல், மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடுதல், தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தல் போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் தவத்திரு திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தவத்திரு மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், தவத்திரு இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சுகி சிவம், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், தேச மங்கையர்க்கரசி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், இ.ஆ.ப., ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

You may also like

Leave a Comment

10 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi