முசிறி, ஜூலை 25: லால்குடி கல்வி மாவட்டத்திற்குட்ட முசிறியில் உள்ள 71 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று சீருடை மற்றும் நிலவரைபட நூல் அனுப்பி வைக்கப்பட்டது. முசிறியில், லால்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை மற்றும் நில வரை பட நூல் அனுப்பி வைக்கப்பட்டது. லால்குடி கல்வி மாவட்ட அலுவலகத்தில் இருந்து முசிறி தொடக்ககல்வி மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து 71 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீருடைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
6, 7, 8 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த 5,455 மாணவர்களுக்கும், 5,394 மாணவிகளுக்கும் என மொத்தம் 10,849 மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா சீருடைகள் நிலவரை படங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியில் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்து பணியாற்றினர். மாவட்ட கல்வி அலுவலகங்கள் சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட விலையில்லா சீருடைகள் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில நிலவரை பட நூலை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர். இது விரைவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.