முரசொலி செல்வம் மறைந்த தருணத்தில் தனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் 

சென்னை: முரசொலி செல்வம் மறைந்த தருணத்தில் தனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்று தெரிவித்துள்ளார். ஒரு கட்சிக்கோ, குடும்பத்துக்கோ ஏற்பட்ட மரணமாக கருதாமல் சமூக நீதி வழியில் இயற்கை தந்த இடர்பாடு என கருதி ஆறுதல் தெரிவித்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வரின் எக்ஸ் வலைத்தளத்தில் கூறியதாவது:
முரசொலி செல்வம் எனும் கழகத்தின் கொள்கைச் செல்வத்தை, திராவிட இயக்கத்தின் படைக்கலனை இழந்துவிட்டோம். உங்களில் ஒருவனான எனக்கு உடன்பிறப்புகளான நீங்களும், உடன்பிறப்புகளான உங்களுக்கு உங்களில் ஒருவனான நானும் ஆறுதல் தெரிவித்து நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டிய வேதனை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். தலைவர் கலைஞரின் தமக்கை மகனாக – தலைவரின் மனசாட்சியாகத் திகழ்ந்த அரசியல் மேதை முரசொலி மாறன் அவர்களின் தம்பியாகப் பிறந்தவருக்குப் பன்னீர்செல்வம் என்று திராவிட இயக்கத் தளகர்த்தர் சர். ஏ.டி.பன்னீர்செல்வத்தின் பெயர் சூட்டியவர் நம் உயிர்நிகர் தலைவர். பெற்றெடுத்த தாய் போல, பெயர் சூட்டிய தலைவர் கலைஞரே அவருக்கு இரண்டாம் தாயாக இருந்து அரவணைத்து வளர்த்தார்.
தலைவரின் நிழலில் வளர்ந்த செல்வம், தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை எனப்படும் முரசொலி என்கிற கொள்கை முழக்கப் பாசறையில் தலைவர் கலைஞரிடமும் தன் அண்ணனும் அரசியல் மேதையுமான முரசொலி மாறன் அவர்களிடமும் பயிற்சி பெற்றார்.
அந்தப் பயிற்சியை அவர் எங்களுக்கும் தந்தார். எனக்கும் என் உடன்பிறந்தவர்களுக்கும் அவர் மாமா அத்தான் என்ற உறவு முறையில் ‘குட்டி அத்தான்’ என்று கூப்பிடுவது வழக்கம் என்றாலும், எப்போதும் அவர் எனக்கு மூத்த அண்ணனாகவே இருந்தார். செல்வம் அவர்கள் பிறந்தபோதே தலைவரின் அன்னை எங்கள் பாட்டி அஞ்சுகம் அம்மையார் அவர்கள், தலைவருக்குப் பெண்பிள்ளை பிறந்தால், செல்வத்துக்கு மணம் முடித்து வைக்கவேண்டும் என்று விரும்பியவர்.
அன்னையின் அன்பு ஆணையை நிறைவேற்றும் வகையில்தான், என் தங்கை பிறந்தபோது, செல்வி என்று பெயர் சூட்டினார் அன்புத் தலைவர். செல்வத்துக்கேற்ற செல்வி என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணமல்ல. சொர்க்கத்தைவிடவும் சுகமான கொள்கை
உரமிக்க குடும்ப உறவுகளால் நிச்சயிக்கப்பட்டு, இயக்கமே குடும்பம் என வாழும் உடன்பிறப்புகளின் வாழ்த்துகளால் நிறைவேறியது. பேரறிஞர் அண்ணா  தலைமையில் நடந்தேறிய – தந்தை பெரியாரும், மூதறிஞர் ராஜாஜியும், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தும் தமிழ்நாட்டின் முன்னணித் தலைவர்களும் ஒருசேர மேடையேறி மனதார வாழ்த்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் குடும்பத்தின் சுயமரியாதைத் திருமணம் அது.
இயக்கப் பணிகளிலும் இயக்கத்தின் கொள்கை முரசமான முரசொலி பணியிலும் நான் காட்டிய ஆர்வத்தை உணர்ந்து என் விரல்பிடித்து வழிகாட்டியவர் அண்ணன் முரசொலி செல்வம்தான். எனக்கு நேரம் வாய்க்கும்போதெல்லாம் அவரைச் சந்தித்து அரசியல் செய்திகளை அறிந்துகொள்வேன். அவருக்குப் பேரறிஞர் அண்ணாவிடம் நிறைய பற்று உண்டு. அண்ணாவை அவர் அடிக்கடி சந்தித்துப் பேசுவதும் உண்டு. அண்ணா சொன்ன செய்திகளை – வரலாற்றுத் தகவல்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார். அதுபோல தலைவர் கலைஞரிடம் பேசியதையும் பகிர்ந்துகொண்டு இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.
தலைவர் கலைஞரின் பிள்ளைகள் எல்லோரும் அவரின் மூத்த பிள்ளையான முரசொலியின் மடியில்தான் தவழ்ந்தோம். அச்சிட்ட இதழ்களைப் பார்சல் கட்டி, வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை நாங்கள் மேற்கொள்வோம். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அண்ணன் செல்வம் அவர்கள் பகுதி நேரமாக முரசொலியில் பணியாற்றி, கட்டுரைகள் – பெட்டிச் செய்திகள் எழுதிக் கொண்டிருந்தார். என்னையும் ஊக்கப்படுத்தினார்.
கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள், கடிதங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, ‘தினபலன்’ என்ற தலைப்பில் தொகுத்து வந்தேன். அது முரசொலியில் தொடர்ந்து வெளிவந்தது. நான் எழுதித் தருவதை முரசொலி ஆசிரியர் குழுவினர் வடிவமைப்பதை ஆர்வத்துடன் கவனித்து, அதனையும் கற்றுக்கொள்ள விரும்பியபோது, வடிவமைப்பு பற்றி எனக்கு சொல்லிக் கொடுத்த ஆசான் அண்ணன் முரசொலி செல்வம்தான்.
நெருக்கடிநிலைக் காலத்தில் கழகமும் தலைவர் கலைஞரும் கடும் சோதனைகளை எதிர்கொண்டபோது தனிமைச்சிறை போன்ற சூழலில் இருந்த தலைவர் கலைஞருக்குத் துணையாக இருந்து தோள் கொடுத்தவர்களில் முதன்மையானவர் அண்ணன் செல்வம். அ.தி.மு.க. ஆட்சியில் இயக்கமும் முரசொலியும் எதிர்கொண்ட சவால்களின்போதும் தலைவர் கலைஞரின் கட்டளைகளை நிறைவேற்றும் செயல்வீரராக இருந்தவர் செல்வம்.
திருச்செந்தூர் திருக்கோயிலின் அறநிலையத்துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட உண்மை வெளிப்பட்ட ஆத்திரத்தில் அன்றைய ஆட்சியாளர்கள் காவல்துறையை ஏவி முரசொலி செல்வத்தை, சட்டமுறைகளுக்குப் புறம்பாகக் கைது செய்து, அலைக்கழித்தனர்.
அந்த நிலையிலும், எந்த நிலையிலும் அவர் நெஞ்சுரத்துடனேயே நெருக்கடிகளை எதிர்கொண்டார். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமரானபோது முரசொலி மாறன் அவர்கள் ஒன்றிய அரசில் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதனால், அவர் வகித்த முரசொலியின் ஆசிரியர் பொறுப்பை யார் ஏற்பது என்றபோது, தன் மூத்த பிள்ளையாகிய முரசொலி எனும் திராவிடச் செல்வத்தை அண்ணன் செல்வத்திடம் ஒப்படைத்தார் தலைவர் கலைஞர்.
அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் முரசொலியை மேலும் மேலும் கூர்தீட்டிய படைக்கலனாக மாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். தன்னுடைய பணியை முடித்துவிட்டு, வடிவமைப்பு செய்து, அச்சுக்கு அனுப்பச்சொல்லிவிட்டு அவர் வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆகிவிடும். அமைதியாகத் தோற்றமளித்தாலும் ஆழத்திலிருந்து பீறிட்டு அடிக்கும் நெருப்புக் குழம்பைக் கக்கும் எரிமலை அவருடைய எழுத்துகள். அவருடைய கைவண்ணத்தில் உருவான சின்ன பெட்டிச் செய்திகூட ‘அக்கினிக் குஞ்சு’ போல அதிகாரக் காடுகளைப் பற்றவைத்து – பதற வைத்திருக்கிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளில், அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்வுடன் முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், அடுத்தநாளே முரசொலி தடையின்றி வெளிவருவதில் முழுமூச்சுடன் செயல்பட்டு, தலைவர் கலைஞரின் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர்.
அ.தி.மு.க ஆட்சியில் முரசொலியில் வெளியான செய்திக்காகக் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் வகையில், சட்டப்பேரவைக்குள் கூண்டு கொண்டுவரப்பட்டு, அதில் ஏற்றப்பட்டார் முரசொலி ஆசிரியரான அண்ணன் செல்வம். தலைவர் கலைஞரின் ஆலோசனைப்படி கருப்புச் சட்டை அணிந்து கூண்டிலேறிய கொள்கைச் சிங்கம் அவர். மன்னிப்பு கேட்க மறுத்த அசல் மனோகரனாக, பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்த கருத்துரிமைப் போராளி. அதனால்தான், ‘கூண்டு கண்டேன் – குதூகலம் கொண்டேன்’ என்று கொள்கைத் தங்கமான அண்ணன் செல்வத்தைப் பெருமிதத்துடன் பாராட்டினார் தலைவர் கலைஞர்.
சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் பின்னிய எழுத்துவலையில் சிக்காத அரசியல் எதிரிகள் இல்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக, முரசொலியின் ஆசிரியராக அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள் பணியாற்றிய நிலையில்தான், 2017-ஆம் ஆண்டு முரசொலியின் பவளவிழாவைக் கொண்டாடினோம். அதன்பிறகு, 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் அரங்கேறிய ‘முரசொலி: சில நினைவலைகள்’ நூல் வெளியீட்டில் என்னுடன் மீண்டும் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.
அரசியல் கடந்து அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடியவர். அதிகாரப் பதவிகள் மீது எந்தவித நாட்டமும் இல்லாமல், அரசியல் விளம்பரங்களுக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அத்தனை பணிகளையும் பொறுப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றிய பேராற்றலுக்குச் சொந்தக்காரர். இளைஞரணி தொடங்கி இன்றைய நிலை வரை என் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணன் முரசொலி செல்வம் இருக்கிறார். என்னைப் பெற்றெடுத்த தலைவர் கலைஞர் – தயாளு அம்மையாரைப் போல நான் மதித்து, என் பிறந்தநாளில் வாழ்த்து பெறுவது அண்ணன் செல்வம் அவர்களிடம்தான்.
‘ஒரு சிலநாட்கள் பெங்களூரு வந்து ஓய்வெடுக்கலாமே’ என்று என்னைச் சில நாட்கள் தன் வீட்டில் ஓய்வெடுக்க அழைத்தவர், நம்மை விட்டுவிட்டு நிரந்தர ஓய்வெடுக்கச் சென்றுவிட்டாரே!
என் பொதுவாழ்வுப் பயணத்தில் துணையாய் நிழலாய் இருந்த பெருஞ்செல்வத்தை இழந்து நிற்கையில் எப்படி என்னை நானே தேற்றிக் கொள்வேன்! தன் வாழ்வின் செல்வமாகக் கருதி ஈருடல் ஓருயிராய் வாழ்ந்த என் அன்புத் தங்கைக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்? குடும்பத்தினரை எப்படித் தேற்றுவேன்? முரசொலி குழுமத்தினருக்கு என்ன வார்த்தைகள் சொல்வேன்?
குலுங்கி அழுதிட மிச்சமிருந்த தோளை நான் இழந்தேன். கழகத்தின் கொள்கைத் தூண் ஒன்றை நாம் இழந்தோம். ‘போய்விட்டீர்களே.. போர்முரசே.. திராவிட முரசொலித்த செல்வமே’ என்று எனக்குள் கதறி, என் வேதனையிலிருந்து மெல்ல மீண்டிட முயற்சி செய்கிறேன். முரசொலி செல்வம் மறையவில்லை! உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார்! என முதல்வர் கூறியுள்ளார்.

Related posts

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட பிறகு காசா போரை நிறுத்த மீண்டும் முயற்சி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் வருகை

இந்தியாவுக்கு பதில் பாரத்; பிஎஸ்என்எல் லோகோ காவி நிறத்திற்கு மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்

தொடர் மழையால் பெங்களூருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் மீட்பு