மும்பையில் முதல் அரையிறுதி இந்தியா – நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை: பைனலுக்கு முன்னேறப் போவது யார்?

மும்பை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் முதல் அரையிறுதியில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா முதல் முறையாக தனித்தே நடத்தும் உலக கோப்பை போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பரிதாபமாக வெளியேறின. இந்நிலையில், பரபரப்பான முதல் அரையிறுதியில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பதிவு செய்து 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியா… 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித், கில் அபாரமாக செயல்பட்டு நல்ல அடித்தளம் அமைப்பது, அடுத்து வரும் வீரர்கள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவுகிறது.

கோஹ்லி, ஷ்ரேயாஸ், ராகுல், சூரியகுமார், ஜடேஜா என அதிரடி வீரர்கள் அணிவகுப்பதால், எதிரணிகளுக்கு இந்திய பேட்டிங் வரிசை சிம்ம சொப்பனமாக உள்ளது என்றால் மிகையல்ல. பும்ரா, ஷமி, சிராஜ் வேகக் கூட்டணியும் ஜடேஜா – குல்தீப் சுழல் தாக்குதலும் இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணம். அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடுவதே இந்திய அணியின் வெற்றி ரகசியம். சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆரவார ஆதரவும் கூடுதல் சாதகம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிசி தொடர்களில் சாதிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள இந்திய அணி, இம்முறை சூப்பர் ஃபார்மில் இருப்பதால் எத்தகைய சவாலையும் சமாளித்து 3வது முறையாக ஒருநாள் உலக கோப்பையை முத்தமிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே சமயம், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் களமிறங்குகிறது. 2019ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக கோப்பை பைனலில் இங்கிலாந்துடன் மோதிய நியூசிலாந்து 50 ஓவர் முடிவிலும் சூப்பர் ஓவரிலும் சரிசமனாக (டை) ஈடுகொடுத்த நிலையில், அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து சாம்பியன் என அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.
நடப்பு தொடரை தொடர்ச்சியாக 4 வெற்றிகளுடன் அமர்க்களமாகத் தொடங்கிய அந்த அணி, அடுத்து தொடர்ச்சியாக 4 தோல்விகளைத் தழுவியதால் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது.

கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள நியூசிலாந்து, அரையிறுதியில் இந்தியாவை வென்று பைனலுக்கு முன்னேற வரிந்துகட்டுகிறது. அந்த அணியிலும் கான்வே, ரச்சின், வில்லியம்சன், பிலிப்ஸ், டேரில் மிட்செல், லாதம், வில் யங் என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. போல்ட், பெர்குசன், சவுத்தீ, சான்ட்னர், ரச்சின் ஆகியோரது பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய அரையிறுதியில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, லோக்கி பெர்குசன், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, வில் யங்.

நேருக்கு நேர்…
* இந்தியா – நியூசிலாந்து அணிகள் இதுவரை 117 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 59 போட்டியிலும், நியூசிலாந்து 50 போட்டியிலும் வென்றுள்ளன (ஒரு ‘டை’, 7ல் முடிவு இல்லை).
* இரு அணிகளும் கடைசியாக மோதிய 10 ஒருநாள் போட்டிகளில் தலா 4 வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன (2 போட்டியில் முடிவு இல்லை).
* 2020ல் நடந்த 3 போட்டி, 2022ல் நடந்த ஒரு போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு மோதிய 4 முறையும் இந்திய அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.

* பான்டிங்கை முந்த வாய்ப்பு
இந்திய வீரர் விராத் கோஹ்லி நடப்பு உலக கோப்பையில் 594 ரன் குவித்து முன்னிலை வகிக்கிறார். தனது 4வது உலக கோப்பையில் விளையாடி வரும் அவர் இதுவரை 35 போட்டியில் 1624 ரன் குவித்துள்ளார் (சராசரி 58.00, சதம் 4, அரை சதம் 11). உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 45 போட்டியில் 2278 ரன் குவித்து (சராசரி 56.95) முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் 46 போட்டியில் 1743 ரன் விளாசி (சராசரி 45.86) 2வது இடத்திலும் உள்ளனர். இன்றைய அரையிறுதியில் கோஹ்லி 120 ரன் அடித்தால், பான்டிங்கின் சாதனையை முறியடித்து 2வது இடத்துக்கு முன்னேறலாம். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சினுடன் முதலிடத்தை (49 சதம்) பகிர்ந்துகொண்டுள்ள கோஹ்லி, 50வது சதத்துடன் உலக சாதனை படைக்கும் வாய்ப்பும் உள்ளது.

* கவலை தரும் புள்ளி விவரம்!
நடப்பு உலக கோப்பையின் லீக் சுற்றில் இந்திய அணி கேப்டன் ரோகித் 503 ரன்னும், நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி 594 ரன்னுக்கு குவித்து அசத்தியுள்ளனர். ஆனால், கடந்த உலக கோப்பை தொடர்களின் அரையிறுதியில் இவர்களின் பங்களிப்பு மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
* ரோகித் 2015 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதியில் 48 பந்தில் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து 2019 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 4 பந்தில் 1 ரன் எடுத்து அவுட்டானார்.
* கோஹ்லி 2011 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 21 பந்தில் 9 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். 2015 உலக கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 13 பந்தில் 1 ரன் எடுத்து அவுட்டான கோஹ்லி, 2019 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் 6 பந்தில் 1 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
* இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ள இந்த வீரர்கள், செமி ஃபைனலில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் இருப்பது கவலை அளிக்கும் புள்ளி விவரமாக அமைந்துள்ளது. இந்த சாபக்கேட்டை நியூசிலாந்து அணியுடனான இன்றைய அரையிறுதியில் தவிடுபொடியாக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related posts

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி