தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் பிடிபட்டான். பின்னர் அவன் தூக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் உசேன் ராணா(63) என்பவரை கடந்த 2009ல் அமெரிக்க போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து இவர் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தஹாவூர் ராணா கலிபோர்னியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தில் உள்ள ஒரு விதி அவரை நாடு கடத்தலில் இருந்து பாதுகாக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட குற்றங்களை செய்ததற்கான ஆதாரங்களை நிரூபிக்க இந்தியா தவறி விட்டது என்று தஹாவூர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த நிலையில், இந்திய- அமெரிக்க ஒப்பந்தத்தின் கீழ் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.