இதையடுத்து மதகுப்பகுதிக்குச் சென்ற குழுவினர், 13 மதகுகளில் மூன்று மதகுகளை இயக்கிப்பார்த்தனர். மதகுகளின் இயக்கமும் சீராக இருந்தது. இதையடுத்து பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள வெட்டப்பட வேண்டிய மரங்கள் குறித்து, தமிழக அதிகாரிகள் கொடுத்திருந்த அறிக்கையின் அடிப்படையில், பேபி அணையில் பணிகள் செய்யவேண்டிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கண்காணிப்பு குழுவினருடன் மத்திய நீர்வள ஆணைய அணை பாதுகாப்பு கண்காணிப்பு இயக்குநர் ராகேஷ் குமார் கவுதம், துணை இயக்குநர் அஜித் கட்டாரியா, அணை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின் மற்றும் இரு மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் இருந்தனர். இதையடுத்து கண்காணிப்பு குழுவினரின் ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை தேக்கடியில் நடைபெற்றது.